பருவமழைக்கு பின் உருவாகும் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அக்டோபர் 24 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உருவாகலாம்
கர்நாடகா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்கிழமை பருவமழைக்கு பிந்தைய பருவத்தின் முதல் சூறாவளி அக்டோபர் 24 ஆம் தேதி வங்காள விரிகுடாவில் உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இது உருவாகும் பட்சத்தில், 2018 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் முதல் சூறாவளியாக இது இருக்கும். இது ஒரு புயலாக வலுப்பெற்றவுடன், தாய்லாந்தால் பெயரிடப்பட்ட சித்ராங் (Si-trang என்று படிக்கவும்) என்று அழைக்கப்படும். மே மாத தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான அசானி புயலுக்குப் பிறகு இந்த ஆண்டு சித்ராங் புயல் உருவாகும்.
திங்கள்கிழமை முதல் வடக்கு அந்தமான் கடலில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுவதாகவும், அதன் கீழ், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக் கடலில் வியாழக்கிழமைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.
“இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்க்கு வாய்ப்புள்ளது. இது மேலும் தீவிரமடைந்து சூறாவளி புயலாக மாறும்,” என்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் IMD தெரிவித்துள்ளது.
வானிலை மாதிரிகளின்படி, புயல் பெரும்பாலும் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நெருங்கி வட தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவில் உள்ள பகுதிகளை பாதிக்கக்கூடும்.
கர்நாடகா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, காரைக்கால், புதுச்சேரி மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 21ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.